TamilsGuide

தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் - தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்

சென்னையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 26) நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மானிய தொகையை தமிழக அரசு வழங்க வலியுறுத்துவது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வருகிற மே 2-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி அதையே காரணமாகவும் முன்னிறுத்தி மே 2-ஆம் தேதி தேதியன்று வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளீர்கள். இது எங்களுக்கு பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது.

தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு காண அளமப்பு ரீதியாக நாங்கள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னித்திய நடிகர் சங்க இருந்து வரும் நிலையில் தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை தாங்கள் வெளியிட்டது வருத்தத்திற்குரியது.

திரைத்துறை சார்ந்த நடிகர்கள் கலைஞர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வலை நிறுத்தம் என்னும் அண்குமுறையை என்றுமே தென்னித்திய நடிகர் சங்கம் ஆதரித்தது. இல்லை, இனியும் ஆதரிக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தாங்கள் கடிதத்தில் குறிப்பிட்டதற்கு எதிர்மாறாக நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவித கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை என்பதையும், அது தொடர்பாக எந்தவித பேச்சு வார்த்தையும் நிகழ்த்த அழைக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த எங்கள் சட்ட விதிகளில் இடமில்லை என்பதையும் இதன் வாயிலாக பதிவு செய்கிறோம்.

இதனிடையே, கடந்த இரு தினங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெகு வேகமாக பரவி வரும் தங்கள் அமைப்பின் சமீபத்திய பொதுக்குழு தீர்மானங்களின் நகலும், பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பான செய்திகளும், தென்னிந்திய நடிகர் சங்கத்தையும்,அதன் உறுப்பினர்களையும் மட்டுமே திரைத்துறையின் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமையான காரணமாக வடிவமைத்து, சித்தரித்து வருவது பெரும் வேதனைக்குரியது.

அது தவறானவை எனில் உடனடியாக அதை மறுத்து தங்கள் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடுமாறும், அந்தத் தகவல்கள் தங்கள் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருந்தால் உடனடியாக அத்தகு உண்மைக்கு புறம்பான அறிக்கையை நமது சந்திப்பிற்கு முன்னர் திரும்ப பெறுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இணைந்து செயலபட்டு தமிழ் திரைத்துறையினர் அனைவரின் நல்ல நிகழ் காலத்திற்காகவும், வளமான வருங்காலத்திற்காகவும் எங்கள் ஒத்துழைப்பை நல்க என்றென்றும் ஆயத்தமாக உள்ளோம். அதையே துறை சார்ந்த பிறரிடமும் எதிர்பார்க்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் வேலைநிறுத்த அறிவிப்பு காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது திரையுலகில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
 

Leave a comment

Comment