TamilsGuide

கொழும்பில் நாளை Walk for Peace பேரணி - விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு

கொழும்பில் நாளை நடைபெறவுள்ள ‘Walk for Peace’ அமைதிப் பேரணிக்காக விசேட போக்குவரத்துக்கு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பில் நாளை (28) நடைபெறவுள்ள ‘Walk for Peace’ (அமைதிக்கான நடைபயணம்) நிகழ்ச்சித்திட்டத்தை முன்னிட்டு, நகரின் பல முக்கிய வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாளை மாலை 04.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இந்த விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை காலை 11.00 மணி முதல் நிகழ்வு நிறைவடையும் வரை, பின்வரும் வீதிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் அல்லது திசைதிருப்பப்படும்:

பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, வோர்ட் பிளேஸ், தர்மபால மாவத்தை.

சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், ஹோர்டன் சுற்றுவட்டம்.

சுதந்திர மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மலர் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள் மற்றும் ஸ்டேபில் வீதி.

மேற்குறிப்பிட்ட வீதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சாரதிகள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்றவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கொழும்பு போக்குவரத்துப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பயணிப்போர் முன்கூட்டியே தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment