அமெரிக்கா - ஈரான் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவிடம் ஈரான் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைகின்றது.
கடந்த வாரம் பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டது.
அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம்....
ஈரான் நாட்டைச் சேர்ந்த குழுவினர் இஸ்லாமாபாத்துக்கு சென்றிருந்த நிலையில், அமெரிக்க குழுவினர் பயணத்தை இரத்து செய்ததால், பாகிஸ்தான் மத்தியஸ்த குழுவிடம் புதிய முன்மொழிவை ஈரான் வழங்கியுள்ளது.
அந்த முன்மொழிவு தொடர்பான செய்தியை அமெரிக்காவின் ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிடம் வழங்கிய புதிய முன்மொழிவில், மூன்று நிலைகளை ஈரான் குறிப்பிட்டுள்ளது.
முதலில் போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இரண்டாவது கட்டமாக அமெரிக்க படைகள் பின்வாங்கப்பட்டு, ஹோர்முஸ் நீரிணைத் திறக்கப்பட்டு, கடல்வழிப் போக்குவரத்து சீர்செய்யப்படும். இது இரண்டும் நடந்தால், இறுதியாக அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் குறித்து அமெரிக்க குழுவிடம் ஈரான் விவாதிக்கும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் ஈரானின் புதிய முன்மொழிவை அமெரிக்கா ஏற்குமா என்பது தெரியவில்லை.


