TamilsGuide

அரிசி, குடிநீரை அதிக விலைக்கு விற்ற கடைகளுக்கு சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, காலி, தங்காலை, கிராந்துருகோட்டை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இந்தத் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

கீரி சம்பா மற்றும் ஏனைய அரிசி வகைகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை இதன்போது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக அந்தந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஒரு வர்த்தகர், காலியில் இரு வர்த்தகர்கள், தங்காலையில் இரு வர்த்தகர்கள் மற்றும் கிராந்துருகோட்டையில் ஒரு வர்த்தகர் ஆகியோருக்கு தலா 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேவேளை அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ஹப்புத்தளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் அபராதமும், அநுராதபுரம் பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment