TamilsGuide

மத்தியகிழக்கு போர் – உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை

ஈரான் போர் காரணமாக ஏற்படக்கூடிய உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளைச் சமாளிக்க பிரித்தானிய அரசாங்கம் தனது தயார்படுத்தல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைத் தணிக்க பிரித்தானிய அரசாங்கம் தனது அவசரகாலத் திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது.

அதன்படி, பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விசேட அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு மற்றும் விநியோகத் தடைகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு வாரத்திற்கு இரண்டு முறை கூடி நிலைமைகளைக் கண்காணித்து வருகிறது.

இதேவேளை, உலகின் 20% எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஈரானியப் போரினால் ஏற்படும் எரிசக்தி நெருக்கடி ஏனைய நாடுகளை விட பிரித்தானியாவையே அதிகம் பாதிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 1.3%-லிருந்து 0.8%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் அச்சமடைந்து பொருட்களைச் சேமித்து வைக்க வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாகனங்களுக்கு வழக்கம் போல எரிபொருள் நிரப்புமாறும், பயணத் திட்டங்களை மாற்ற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் உறுதிப்படுத்த அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment