யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதான வீதியில் பண்ணை பகுதியில், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீர் செய்யுமாறு , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பிய கடிதத்தில்,
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பாதையிலிருந்து தீவகத்தை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் உள்ள மின்விளக்குகள் நீண்டகாலமாகப் பழுதடைந்துள்ளமையால், அப்பகுதி இரவு நேரங்களில் முழுமையாக இருளில் மூழ்கியுள்ளது.
இவ்வீதியானது யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான பொது இடமாக விளங்குவதுடன், அப்பகுதியில் மக்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், குடும்பங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் இடமாக இது காணப்படுகின்றது.
அதேவேளை தீவகப் பகுதிகளுக்கான பிரதான இணைப்புப் பாதையாக இது இருப்பதனால், வெளிச்சமின்மை காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
தற்போது மின்விளக்குகள் ஒளிராத காரணத்தினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன், இருளைப் பயன்படுத்தி தேவையற்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, குறித்த பகுதியில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை உடனடியாகப் பழுதுபார்த்து மீண்டும் ஒளிரச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


