வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது உங்கள் நண்பரின் பெயரிலோ வரும் சந்தேகத்திற்குரிய “.apk” (dot apk) எனும் அபாயகரமான கோப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து திறந்தால், உங்கள் மொபைல் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் (Hackers) கைக்குச் சென்றுவிடும்.
இதன் மூலம் உங்கள் SMS செய்திகள் மற்றும் OTP குறியீடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் ஹேக்கர்களுக்குத் தெரிவதால், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைக் கூட அவர்கள் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, உங்களுக்கு வரும் செய்திகளைத் திறக்கும்போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு WhatsApp மற்றும் Telegram சமூக ஊடகங்கள் ஊடாக “.apk” (.apk) கோப்புகள் (Files) அனுப்பப்படுவதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
apk கோப்பு என்பது ‘Android Package Kit’ ஆகும். இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செயலிகளை (Apps) நிறுவுவதற்கான ஒரு ‘Setup File’ ஆகும்.
சமூக ஊடகங்கள் ஊடாக உங்களுக்கு வரும் திருமண அழைப்பிதழ், மின்சாரக் கட்டணம் அல்லது அதிர்ஷ்டலாபச் சீட்டு போன்ற பெயர்களில் அனுப்பப்படும் இந்த apk கோப்புகளை, ஒரு படம் அல்லது PDF எனக் கருதி கிளிக் செய்தவுடன், அது உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு செயலியாக (App) தானாகவே நிறுவப்படும் (Install).
இதன் பின்னர், ஹேக்கர்களுக்கு உங்கள் மொபைல் போனில் உள்ளவற்றைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
அதன் மூலம் உங்களுக்கு வரும் SMS செய்திகளை அவர்களால் வாசிக்க முடியும் என்பதுடன், உங்கள் வங்கி கணக்குகள் தொடர்பான இரகசிய OTP குறியீடுகளும் நீங்கள் அறியாமலேயே ஹேக்கர்களின் கைக்குச் சென்றுவிடும்.
இதன் காரணமாக, அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது நண்பரின் பெயரிலிருந்தோ வரும் இவ்வாறான சந்தேகத்திற்குரிய “.apk” கோப்புகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் போனுக்குத் தேவையான செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போது எப்போதும் Google Play Store அல்லது Apple App Store ஆகியவற்றைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அத்துடன், மொபைல் போன் செட்டிங்ஸில் (Settings) உள்ள “Install Unknown Apps” என்ற தெரிவை முடக்கி (Disable) வைப்பதும் அவசியமாகும்.
ஒருவேளை நீங்கள் இவ்வாறான மோசடியில் சிக்கினால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கோ அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


