TamilsGuide

அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவு – துணுக்காய் வலயக்கல்விப் பணிமனையின்கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீட்டு செய்துள்ளார்.

பாடசாலைச் சமூகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய கட்டடத்திற்கு தீந்தை பூசுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 20 ஆம் திகதி அன்று குறித்த பாடசாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

அந்தவகையில் அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திலுள்ள 30வருடங்கள் பழமைவாய்ந்த கட்டடங்கள் மங்கியநிலையிலும், பாதிப்படைந்தும் காணப்பட்டுவந்தநிலையில், தமது கோரிக்கைக்கு அமைவாக அக்கட்டடங்களுக்கு தீந்தை பூசுவதற்காக நிதி ஒதுக்கீடு மேற்கொண்டமைக்கு பாடசாலை முதல்வரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு 47 மாணவர்கள் கல்விகற்கும் குறித்த பாடசாலைக்கு பொது ஆங்கிலம் பாடத்திற்கான ஆசிரிய ஆளணி உள்ளடங்கலாக மொத்தம் ஆறு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரிய ஆளணிகள் காணப்படுகின்றன.

இருப்பினுப் குறித்த பாடசாலையில் நான்கு ஆசிரியர்களே பணியாற்றிவருவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதுதவிர சிறார்களுக்கான நேர்த்தியான விளையாட்டு முற்றமொன்றினை அமைத்துத்தருமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக நேரடியாகப் பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment