TamilsGuide

இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மாற்று சினிமா ரசனையை ரசித்து ஏற்றுக்கொண்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்!

"தங்கப்பதக்கம்",பாதிப்பினால் நிறைய திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்றுள்ளன.
வால்டர் வெற்றிவேல்,இந்தியன்,அஞ்சாதே போன்ற படங்களுக்கு inspiration தங்கப்பதக்கம் திரைப்படம்தான்.
'அஞ்சாதே'திரைப்படத்திற்கு inspiration ,'தங்கப்பதக்கம்',திரைப்படம்தான், 'என்று இயக்குனர் மிஷ்கின் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
'தங்கப்பதக்கம்'திரைப்படமாக்கப்படுவதற்கு முன்பு நாடகமாக நடிகர் செந்தாமரை அவர்களால் மேடையேற்றப்பட்டுள்ளது.இந்த நாடத்திற்கு கதை வசனம் எழுதியவர் மகேந்திரன் அவர்கள்.நாடகத்தின் பெயர் இரண்டில் ஒன்று.
இந்த நாடகத்தை ஒருமுறை பார்த்த நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு  அந்த நேர்மையான  போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை  தான் ஏற்று நடிக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டுள்ளார்.
தன்னுடைய விருப்பத்தை செந்தாமரையிடம் சொல்லவே, அவரும் சிவாஜியின் ஆர்வத்தைப் புரிந்துக் கொண்டு, அந்த இரண்டில் ஒன்று நாடகம் சிவாஜி நாடக மன்றத்தின் மூலமாக தங்கப்பதக்கமாக அரங்கேறி வெற்றிநடைபோட்டுள்ளது.
அன்றைக்கு அந்த நாடகத்தை என்னுடைய தந்தை 25 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய் கொடுத்து பிளாக்கில் வாங்கி பார்த்துள்ளார்.
1972 ஆம் ஆண்டு 100 ரூபாய் என்பது பெரும் தொகைதானே!
பின்பு,திரைப்படமாகவும் பெரும் வெற்றி பெற்றது என்பது எல்லோருக்குமே தெரியும்.
அந்த S.P.சௌத்ரி கதாபாத்திரத்தை எவரால் மறக்க இயலும்.
இந்தப் படத்தில் மிக முக்கியமான காட்சி ஒன்று வரும்.
மனைவி இறந்த தகவல் கேட்டு S.P.சௌத்ரி வீட்டிற்கு வரும் காட்சியின் சம்பந்தமாக இயக்குனர் P.மாதவன் அவர்களுக்கும் மகேந்திரன் அவர்களுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.இயக்குனருக்கோ வசனம் மிகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.மகேந்திரன் அவர்களுக்கோ நாலே வரியில் இந்தக் காட்சியை உணர்ச்சிகரமாக ஆக்கிவிடமுடியும் என்று சொல்லியிருக்கிறார்.
இயக்குனரின் ரசனைக்கு தகுந்த படி ஒன்றும் தன்னுடைய ரசனைக்கு ஏற்றவாறு மற்றொன்றும் எழுதி வைத்துக்கொண்டு சிவாஜியை அணுகியிருக்கிறார்.
சிவாஜி அவர்கள் மகேந்திரன் அவர்களின் ரசனையை புரிந்து ஏற்றுக் கொண்டு அதன்படியே நடித்துக்கொடுத்துள்ளார்.
இந்தப் படத்தின் மாஸ்டர்பீஸே இந்தக் காட்சிதான்.சிவாஜி பேசும் அந்த நாலு வரி வசனம் நம்மை கலங்கடித்து விடும்.
காட்சிப்படி வீட்டிற்குள் சோகத்தோடு வருவார்.Uniform 

ஐ கழற்றி விட்டு பனியனோடு மாடிப்படி ஏறி வருவார்.கூடத்தில் மனைவியான கே.ஆர் விஜயாவின் உடல் கிடத்தப்பட்டிருக்கும்.மனைவியின் உடலின் அருகில் வந்து நிற்கும் சிவாஜி சில நொடிகள் மனைவியின் முகத்தையே உற்றுப்பார்த்துவிட்டு பேசும் வசனம்," லட்சுமி....நான் வந்து ரொம்ப நேரமாச்சு ...ஏன்,என் கூட பேசமாட்டேன்கிறே....நான் Uniformலே இருக்கும்போதுதான் பேசப் பயப்படுவே...இதோ பார்.....நான் Uniform இல்லாம வந்துருக்கேன்...பேசமாட்டே....பேசுமா.....நா  நேரம் கழிச்சு வருவேன்.....நீ  எனக்காக தூங்காம காத்துக்கிட்டு இருப்பே ...இப்போ நான் நேரத்தோடு வந்துருக்கேன்.....நீ  தூங்கிட்டீயே....நா    என்னம்மா தப்பு பண்ணேன்....ஏம்மா என்னை விட்டுப் போயிட்டே ...எனக்கு யாருமே இல்லேயேம்மா...என்னையை தனிமரமா ஆக்கிட்டுப் போயிட்டியேம்மா....என்னால தாங்க முடியலம்மா...."
என்று பேசிவிட்டு மனைவியின் முகத்தை கட்டிப்பிடித்து வெடித்து அழுவார்.பார்க்கும் நம்மிடமும் கண்ணீர் சிந்தும்.அந்த அளவிற்கு உணர்வுபூர்வமான காட்சியது.
இந்தக்காட்சியை நாம் பார்க்கும் பொழுது சிவாஜி அவர்களின் நடிப்பிற்கு மகேந்திரன் அவர்களின் வசனமும் காட்சி அமைப்பும் பேருதவியாக இருந்தது என்பதை நம்மால் உணரமுடியும்.

 

சே மணிசேகரன்
 

Leave a comment

Comment