TamilsGuide

விபத்தில் கொல்லப்பட்ட இலங்கைத் தமிழர்கள் மூவர் - சாரதி மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

கனடாவில், இலங்கைத் தமிழர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில், சாரதி மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள மார்க்கம் நகரில், இலங்கைத் தமிழர்களான ஸ்ரீரதி சண்முகநாதன் (52), அவரது பிள்ளைகளான பதீரன் புவனேந்திரன் (21), நிலுஷ்சனா புவனேந்திரன் (23) ஆகியோர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார்கள். 

அப்போது, சிக்னலில் எரிந்துகொண்டிருந்த சிவப்பு விளக்கை மீறி வந்த ட்ரக் ஒன்று அந்தக் கார் மீது மோதியது. அந்த விபத்தில், பதீரனும் நிலுஷ்சனாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, படுகாயமடைந்த ஸ்ரீரதி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் பலியான துயரத்திலிருந்து விடுபட அவர்களுடைய குடும்பம் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அக்குடும்பத்துக்கும் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், விபத்தை ஏற்படுத்தி மூன்று உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த ட்ரக்கின் சாரதியான அந்தோனி பக்லியேரி (Anthony Baglieri) மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியான மார்க் எட்வர்ட்ஸ் ( Mark Edwards), அந்த விபத்து துயரத்தை உருவாக்கியது உண்மைதான் என்றாலும், சாரதியின் செயல்கள் குற்றச்செயல்கள் அல்ல என பொலிசார் முன்வைத்த ஆதாரங்கள் மற்றும் தான் நடத்திய குறுக்கு விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்ரக் சாரதியான அந்தோனி வாகனம் ஓட்டும்போது மது அருந்தியிருக்கவில்லை என்றும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டவில்லை என்றும் கூறியுள்ள நீதிபதி, வாகனம் ஓட்டும்போது முகத்தில் அடித்த சூரிய ஒளி, ட்ரக்கில் சாரதி அமர்ந்திருந்த இடம் அவரால் மற்ற வாகனங்களை சரியாக பார்க்க அனுமதிக்காதது மற்றும் எதிரே அவசர உதவி வாகனங்கள் வந்ததால் அந்த வாகனங்களில் எரிந்துகொண்டிருந்த பளீர் ஒளி விளக்குகள் ஆகியவை அவரது கவனத்தை திசை திருப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

அந்த சாரதி தனது 12 ஆண்டுகால பணியில் ஒருமுறை கூட விபத்தை ஏற்படுத்தியதில்லை என்றும், தான் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது என நினைத்ததாக தனது பணி வழங்குவோரிடம் அவர் கூறியதாகவும், அவரது கவனத்தை திசை திருப்ப காரணமாக இருந்த விடயங்கள் அவரது தரப்பு வாதத்தை விளக்குவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நீதிபதி.

இந்த தீர்ப்பு, உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினருக்கும் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பைக் கேட்ட பதீரன், நிலுஷ்சனாவின் தந்தையும், ஸ்ரீரதியின் கணவருமான புவனேந்திரன் பூபாலசிங்கம், கடவுளே, என் வாழ்க்கையே போய்விட்டது, மூன்று உயிர்கள், இரண்டு சின்னப் பிள்ளைகள், இன்று எனக்கு நேரிட்டது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம் என கண்ணீர் விட்டுக் கதற, நீதிமன்றம் முன் கூடியிருந்தவர்கள், நீதி வேண்டும் என முழக்கமிட்டுள்ளார்கள்.

இது நியாயமல்ல என அவர்களுடைய குடும்ப நண்பர் ஒருவர் கூறியுள்ள நிலையில், தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், தாங்கள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment