கனடாவில் தனது காதலியின் இரண்டு வயது மகனை கழுத்தை நெரித்தும், காலால் எட்டி உதைத்தும் சித்திரவதை செய்த பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராவில் (Nanny Camera) இந்த கொடூர காட்சிகள் பதிவாகியிருந்தன.
பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் K.J.M. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தனது காதலியுடன் வசித்து வந்தபோது, அந்த குழந்தைக்கு ஒரு தந்தை முறையான பராமரிப்பாளராக (Caregiver) இருந்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையில், கழுத்தை நெரித்து தாக்கியது மற்றும் உடல்ரீதியாக துன்புறுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி, இரண்டு நாட்களுக்குள் இரண்டு முறை இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன: படுக்கை அறையில் இருந்த குழந்தையை எட்டி உதைத்து, பின்னர் தரை விரிப்பில் வைத்து கழுத்தை நெரித்துள்ளார்.அப்போது அந்த பிஞ்சு குழந்தை வலியால் அலறியுள்ளது.
இரண்டு நாட்கள் கழித்து, குழந்தை அழுதுகொண்டிருந்தபோது மீண்டும் அறைக்குள் சென்ற அவர், குழந்தையின் தலையிலேயே எட்டி உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
குழந்தையின் உடலில் ஏற்பட்ட சிராய்ப்புகளைக் கண்டு சந்தேகமடைந்த தாய், ரகசிய கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இந்த கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
பாதுகாப்பாக இருக்க வேண்டிய படுக்கையறையிலேயே, நம்பகமான ஒருவரால் இந்த குழந்தை தாக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிறிய வயதில் இழைக்கப்பட்ட இந்த வன்முறை, குழந்தையின் எதிர்காலத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். இது எவ்வகையிலும் மன்னிக்க முடியாத குற்றம் என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமேரா கோலின்ஸ்கி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


