மண்டபம் அடுத்துள்ள அய்யன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் ஆமை, கடல் பசு, டால்பின் சிக்குகிறது.
அதனை உடனடியாக மீனவர்கள் உயிருடன் பத்திரமாக கடலில் விட்டு விடுகின்றனர்.
இந்நிலையில் இன்று (18) மண்டபம் அடுத்த அய்யன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்து உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆண் கடல் பசு எனவும் அது சுமார் 800 கிலோ எடை கொண்டது எனவும், அதன் அகலம் 115 செ.மீ, சுற்றளவு 230 செ.மீ தெரியவந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கடல் பசு மீன்பிடி படகின் அடிபகுதியில் உள்ள இரும்பு விசிறி வெட்டியதில் உயிரிழந்ததா? அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என மண்டபம் வனச்சரகர் தெரிவித்தார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த கடல் பசுவை உடற்கூறாய்வு செய்தனர். அதன் பின் வனத்துறையினர் இறந்த கடல் பசுவை கடற்கரை மணலில் புதைத்தனர்.


