ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் பிணை மனுவை, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (17) நிராகரித்தது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டக்குழுவினர் சமர்ப்பித்த மனுக்களை ஆய்வு செய்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு குறித்த விசாரணைகள் தொடர்வதால், சந்திரசேனாவின் தடுப்புக் காவலை நீட்டித்து, அவரை ஏப்ரல் 28 வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.
தேசிய விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


