இன்று (16) முதல் நாடு முழுவதும் 50 முதல் 60 சதவிகிதம் அளவில் பேருந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், தனியார் பேருந்து சேவைகள் நாளை (17) முதல் வழக்கம் போல் இயங்கும் என்று சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
நேற்று (15) வேலை நாளாக இருந்தபோதிலும், பயணிகள் பற்றாக்குறை இருந்ததாகவும், இதன் காரணமாக ஏராளமான பேருந்துகள் பயணிகள் இல்லாமல் இயங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், இன்றிலிருந்து ரயில் பயணங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இன்று சுமார் 120 ரயில் பயணங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
இன்று காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும், 18 மற்றும் 19 ஆம் திகதிகளல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இன்று காலை 6.10 மணிக்கு மாத்தறைக்கு ஒரு சிறப்பு இரயில் புறப்பட்டது, பிற்பகல் 1 மணிக்கும் ஒரு சிறப்பு ரயில் புறப்பட உள்ளது.
மேலும், 19 ஆம் திகதி மாலையில் மாத்தறையிலிருந்து பல சிறப்பு இரயில் சேவைகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


