ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், போரை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்நீத்த தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நினைவு ஊர்திப் பயணம் இன்று காலை திருகோணமலையில் ஆரம்பமானது.
சிவன் கோவிலுக்கு முன்பாக இந்த நினைவு ஊர்தி தனது பயணத்தைத் தொடங்கியது.
ஊர்தி புறப்படுவதற்கு முன்னதாக, அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி, சுடர் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தமிழ் உணர்வாளர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அன்னை பூபதியின் தியாகத்தை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தல் மற்றும் தமிழின உரிமைப் போராட்டத்தின் வரலாற்றை நினைவுகூருதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


