TamilsGuide

காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்

சந்திரகுமார் தலைமையிலான அணியினருடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்டத்தில் சந்திரகுமார் அணியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் சூழ்நிலை இல்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாகத் தனது கட்சியின் மத்திய குழுவிற்கும் தலைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சந்திரகுமார் அணியினரைச் சாடி அவர் மேலும் கூறியதாவது:

தேசத்தையும் மக்களையும் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களைச் சின்னாபின்னமாக்குவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்கள் இப்போது தமிழ் தேசியம் பேசுகின்றனர்.

அவ்வாறானவர்களைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஒருவரும் சாகவில்லை என்றும், இறந்தவர்கள் அனைவரும் புலிகள் என்றும் கூறி டிப்போ சந்தியில் ஊர்வலம் நடத்தியவர் சந்திரகுமார்.

பல பாடசாலை அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர்.

அபிவிருத்தி செய்து தமிழர்களைக் காப்பதாகக் கூறியவர்கள், இன்று மீண்டும் தமிழ் தேசியம் தான் கதி என்று கூறுவதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

சிறிரெலோ அமைப்பைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைத்தபோது, அதனால் ஆபத்து வரும் எனத் தான் ஏற்கனவே எச்சரித்ததைச் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

தற்போது சிறிரெலோ தலைவர் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இவர்களுடன் இணைய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் எவராவது இவர்களுடன் இணைந்து செயற்பட்டால் அது அவர்களைப் பொறுத்தது எனத் தெரிவித்தார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் ஏற்கனவே கூட்டமைப்பில் இருந்தவை என்றாலும், அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு தமிழ் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்களுடன் எவ்வித சமரசமும் இல்லை என அவர் உறுதியாகக் கூறினார்.
 

Leave a comment

Comment