TamilsGuide

அரச அலுவலகங்கள் இன்று முதல் வழமை போல் இயங்கும்- பயணிகளுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இன்று முதல் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விசேட விடுமுறை நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) ஆகிய நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் வழமை போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் மட்டுமே உத்தியோகபூர்வ விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புத்தாண்டுக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் பணி நிமித்தம் கொழும்பு திரும்புவதற்காக இன்று (15) முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதி கருதி அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால், அலுவலக ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பயணிகளின் நெரிசலைக் கருத்திற்கொண்டு தேவைக்கேற்ப மேலதிக ரயில்களைச் சேவையில் ஈடுபடுத்தத் தயாராக இருப்பதாகத் திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பும் மக்கள் எவ்வித அசௌகரியமுமின்றித் தமது இலக்குகளைச் சென்றடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment