மன்னார் இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கிளையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நிர்வாக முறைகேடுகளைக் கண்டித்து, அந்த அமைப்பின் தன்னார்வப் பணியாளர்கள் இன்று (15) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றைப் முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 50-இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் தன்னார்வப் பணியாளர்களாகச் சேவையாற்றி வருகின்றனர்.
எந்தவித ஊதியமும் இன்றி மனிதநேயப் பணியாற்றி வரும் தங்களை, சங்கத்தின் உத்தியோகபூர்வ அங்கத்தவர்களாக இணைத்துக்கொள்ளுமாறு நீண்டகாலமாக விடுத்த கோரிக்கையை நிர்வாகம் திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்று காலை 10 மணியளவில் மன்னார் பொது நூலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய பணியாளர்கள், தமது வாய்களைச் சிவப்புத் துணியால் கட்டியவாறு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“நிர்வாகமே ஜனநாயகத்தைக் கொலை செய்யாதே”, “அங்கத்துவத்தை உறுதிப்படுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, அங்கிருந்து மன்னார் மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.
போராட்டத்தின் இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனைச் சந்தித்த தன்னார்வலர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
முறையற்ற விதத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய இடைக்கால நிர்வாக சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்.
மாவட்டச் செயலாளர் தலைமையில் நிர்வாக முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கடந்த மூன்று வருடங்களாக நடத்தப்படாத பொதுச்சபைக் கூட்டத்தை ஜனநாயக முறையில் நடத்தி, புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்டங்கள் மற்றும் நிதி விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
தகுதியின் அடிப்படையில் தன்னார்வப் பணியாளர்களுக்கு உடனடியாக அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தனிப்பட்ட சிலரின் விருப்பத்திற்கு இணங்கச் சங்கம் வழிநடத்தப்படுவதாகவும், தேசிய யாப்பிற்கு முரணாகச் செயற்படுவதாகவும் அரசாங்க அதிபரிடம் பணியாளர்கள் விவரித்தனர்.
இந்தக் கோரிக்கைகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசியத் தலைவர் மீள்பரிசீலனை செய்து, தனியான விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்களுக்காகச் சேவையாற்றும் ஒரு சர்வதேச அமைப்பின் மாவட்டக் கிளையில் எழுந்துள்ள இந்த நிர்வாகச் சிக்கல், மன்னார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


