சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கம் என்பன முறையான சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவில்லை எனவும், அதன் மூலம் அவரது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
துஷார உபுல்தெனியவின் மனைவியினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதியமைச்சின் செயலாளர் ஆகிய தரப்புக்கள் அரசியலமைப்பு விதிகளை மீறியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கல் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்தே துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விசாரணையை நடுநிலையாக முன்னெடுக்க வேண்டும் எனக்கூறி, கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.
பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளை அடுத்து 2025 ஜூன் 10 ஆம் திகதி உபுல்தெனிய கைது செய்யப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அவரது மனைவியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அதன்பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழு, உபுல்தெனியவை கைதுசெய்வதற்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முறையான மற்றும் போதுமான விசாரணையை மேற்கொள்வதற்குத் தவறியிருப்பதாகத் தனது விசாரணையில் கண்டறிந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபரின் வாக்குமூலங்கள் முறையாகப் பரிசீலிக்கப்படவில்லை எனவும், பணி இடைநீக்கம் தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளரால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் உண்மைகளை உறுதிப்படுத்துவதற்குப் போதுமானதாக இல்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஆகவே துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கத்தின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகிய தரப்புக்கள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாக மனிதஆகவே துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணி இடைநீக்கத்தின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகிய தரப்புக்கள் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


