சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை முன்னிட்டு நிலவும் புண்ணிய காலப்பகுதியைக் கருத்திற் கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் இரண்டு பிரதான பூசைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஸ்நாயக்க நிலமே அலுவலகம் அறிவித்துள்ளது.
இன்று (ஏப்ரல் 13): மாலை 6:30 மணிப் பூசையைத் தொடர்ந்து, இரவு 9:00 மணியளவில் பாற்சோறு பொங்கி படைக்கப்பட்ட பின்னர் மகா தேவாலயம் மூடப்படும். மூடப்பட்ட தேவாலயம் மீண்டும் நாளை (ஏப்ரல் 14) பிற்பகல் 2:00 மணிக்கே திறக்கப்படும்.
அதன் பின்னரே பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களையும் பழப் பூசைகளையும் வழங்க முடியும். அதன்படி நாளை (14ஆம் திகதி) அதிகாலை 4:30 மணி மற்றும் முற்பகல் 10:30 மணி ஆகிய இரண்டு நேரப் பூசைகளும் நடைபெறமாட்டாது.
எனவே, பூசை நடைபெறாத நேரங்களில் வரிசையில் நின்று அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என பஸ்நாயக்க நிலமே திலிண மதுசங்க பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வருடாந்தம் நடைபெறும் சித்திரை திருவிழா ஊர்வலம் நாளை (14) இரவு 7:45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. மகா சங்கத்தினரின் செத்பிரித் பாராயணத்துடன் ஆரம்பமாகும் இந்த ஊர்வலம், பிரதான நுழைவாயில் ஊடாகப் புறப்பட்டு வள்ள்ளி அம்மன் ஆலயத்தை சென்றடையும்.
வள்ளி அம்மன் ஆலயத்தில் பாரம்பரிய வழிபாடுகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஊர்வலம் மீண்டும் பிரதான வீதி வழியாக மகா தேவாலயத்தை வந்தடையும்.
இந்த ஊர்வலத்தில் யானைகள், கண்டி மற்றும் கீழ்நாட்டு நடனக் குழுக்கள், காவடிக் குழுக்கள் மற்றும் தீப்பந்தக் காட்சிகள் எனப் பல கலாசார அம்சங்கள் இடம்பெறவுள்ளன. ஊர்வலம் நிறைவடைந்து தேவாலயத் தேவா பணிகள் முடிந்த பின்னரே, மீண்டும் பக்தர்களின் பூசைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


