நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும், ஒளிப்பதிவு பணிகளை ஆர்.டி. ராஜசேகர் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்திய மதிப்பில் ரூ. 50 முதல் ரூ. 55 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தொடர்பான முதற்கட்ட போட்டோஷூட் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், வருகிற ஏப்ரல் 17-ஆம் தேதி நடிகர் விக்ரமின் பிறந்த நாளை ஒட்டி இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாத தொடக்கத்தில் தேர்தல் முடிந்த பிறகு தொடங்கும் என்றும் இந்தப் படம் இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாத வாக்கில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் நடிகர் விக்ரம் ரசிகர்களை பூர்த்தி செய்யும் வகையில் முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இயக்குநர் ஆனந்த் சங்கர், நடிகர் விக்ரம் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான இருமுகன் திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் இந்தக் கூட்டணி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ஒன்றிணைந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.


