மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் 16 வயது சிறுவனைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்ற அதிர்ச்சிச் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில், கடந்த மார்ச் 31-ஆம் திகதி இரவு ஒரு கும்பல் புதையல் தோண்டுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், மொரட்டுவ பிரதேச செயலகத்தின் பிரதம கணக்காளர் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட 9 பேரைக் கைது செய்தனர்.
இந்தச் சோதனையின் போது பொலன்னறுவையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான்.
நீதிமன்ற விசாரணையின் போது, அச்சிறுவன் தனது குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாகப் பிறந்த முதல் ஆண்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளான்.
ஜாதகப்படி மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் சங்கமித்த போது பிறந்தவன் என்பதால், அவனைப் பலிகொடுத்துப் புதையல் எடுக்க இக்கும்பல் திட்டமிட்டதாகச் சிறுவன் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால், எதிர்தரப்பு சட்டத்தரணி அச்சிறுவன் புதையல் இருக்கும் இடத்தைக் கண்டறியும் திறன்கொண்ட ‘மந்திரவாதி’ என வாதிட்டார்.
இந்த வழக்கு நேற்று (10) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 20-ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மீட்கப்பட்ட சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் தொடர்ந்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
புதையல் தோண்டப்பட்ட மண்முனைப் பகுதியானது, சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர் குலத்தைச் சேர்ந்த நாச்சியார் என்பவரால் ஆட்சி செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.
இவ்வாறான இடங்களைத் தோண்டி எடுப்பதன் மூலம் தமிழ் மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளை அழிக்கும் முயற்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


