TamilsGuide

பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கிய ஓரியன் விண்வெளி வீரர்கள்

நாசாவின் ஓரியன் விண்கலம் நிலவுக்கான 10 நாள் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையை ஒட்டிய பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

வளிமண்டலத்திற்குள் நுழையும் போது சுமார் 6 நிமிடங்கள் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விண்கலம் பாதுகாப்பாக மேகமூட்டங்களுக்கு இடையே பாராசூட்டுகள் மூலம் மெதுவாகக் கடலில் இறங்கியது.

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜான் பி. முர்தா கப்பல் மற்றும் மீட்புக் குழுவினர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தனர்.

அவர்கள் நான்கு விண்வெளி வீரர்களையும் (ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெரமி ஹான்சன்) பாதுகாப்பாக மீட்டனர். இந்தத் திட்டம் மனித விண்வெளி வரலாற்றில் பல புதிய மைல்கற்களை எட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி, ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து சுமார் 406,771 கி.மீ (252,756 மைல்கள்) தொலைவை எட்டியது. இது 1970 இல் அப்பல்லோ 13 விண்கலம் படைத்த சாதனையை முறியடித்து, மனிதர்கள் பூமியிலிருந்து மிக நீண்ட தூரம் பயணித்த புதிய உலக சாதனையாகப் பதிவானது.

1972 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக நிலவைச் சுற்றி மனிதர்கள் பயணித்த முதல் மிஷன் இதுவாகும். இந்த 10 நாள் பயணத்தில் வீரர்கள் நிலவின் மேற்பரப்பை அவதானித்ததுடன், எதிர்கால நிலவுத் தளம் மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களுக்குத் தேவையான பல முக்கிய சோதனைகளை மேற்கொண்டனர்.

அதேவேளை ஆர்டெமிஸ் II இன் வெற்றியானது, 2028 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மனிதர்களைத் தரை இறக்கத் திட்டமிட்டுள்ள ஆர்டெமிஸ் III திட்டத்திற்கு மிக முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளது.
 

Leave a comment

Comment