TamilsGuide

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு - 2 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிப்பு

கொழும்புப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு மதுபானங்களை மதுவரித் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கொழும்புப் பிரதேசத்திலுள்ள பல விற்பனை நிலையங்களில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவரித் திணைக்களத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. பிரேமரத்னவின் ஆலோசனையின் கீழ், மதுவரி விசேட சோதனைப் பிரிவினர் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

சுமார் 30 அதிகாரிகளைக் கொண்ட 4 விசேட குழுக்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டன.

இதன்போது கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் (Security Stickers) அனைத்தும் முற்றிலும் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளை ஏய்ப்பு செய்யும் நோக்கில், இந்தப் போலி ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட மதுபானத் தொகுதியின் சந்தைப் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மதுபானங்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எப்படிக் கொண்டுவரப்பட்டன? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து மதுவரித் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் இவ்வாறான போலி மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நாடு முழுவதும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment