குவைட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த இலங்கைத் தாய் ஒருவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவரது சடலத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து மீனா (43) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், குடும்ப வறுமை காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக குவைட் நாட்டுக்குச் சென்றிருந்தார்.
குவைட்டில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.
உயிரிழந்த மீனாவின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வந்து இறுதிக்கிரியைகளை முன்னெடுப்பதற்கு குடும்பத்தினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஊடாக தேவையான தூதரக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் உயிரிழந்த தாயின் உடலைத் தேடி அவரது பிள்ளைகளும் உறவினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


