மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, விநியோகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் சரக்குக் கப்பல்கள் நாட்டுக்கு வந்து சேரும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாத்தையில் நேற்றைய தினம் மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்த “55 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்தம்” நிகழ்வி கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
மத்திய கிழக்கு போர் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் ஏற்கனவே சமாளித்துவிட்டது.
தட்டுப்பாடுகளைச் சமாளிப்பதற்கான குறுகிய காலத் தீர்வுகளாக, QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை, ஒற்றை-இரட்டை வாகனப் பதிவு எண் எரிபொருள் விநியோக முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை உள்ளிட்ட முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.
தற்போது வரிசைகள் குறைந்துள்ளன, QR அமைப்பு திறம்படச் செயல்பட்டு வருகின்றது.
விநியோக நிலைமைகள் மேம்பட்டால், கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விடுமுறையும், நிலைமை சீரடைந்தவுடன் திரும்பப் பெறப்படலாம்.
அதன் மூலம் நாடு மீண்டும் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்ப வழிவகை செய்யப்படும்.
தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்ய உதவும் வகையில், ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, எரிபொருள் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – என்றார்.


