• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரமோஸ் ஏவுகணை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் உயிரிழப்பு... 

ஜிர்கான் என்ற அதிவேக ஏவுகணை மற்றும் புதிய தலைமுறை இந்திய - ரஷிய பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணை ஆகியவற்றின் உருவாக்கத்துடன் தொடர்புடைய, ரஷியாவின் முன்னணி ஏவுகணை வடிவமைப்பாளரான அலெக்சாண்டர் லியோனோவ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 74-வது வயதில் காலமானார். இந்த தகவலை அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

டெல்லியை தளமாக கொண்ட பிரமோஸ் ஏரோ-ஸ்பேஸ் நிறுவனத்தின் ரஷிய கூட்டு நிறுவனமான NPO மஷினோஸ்ட்ரோயேனியா (NPOMASH)-இன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் தலைமை வடிவமைப்பாளராகவும் லியோனோவ் இருந்தார்.

ஆர்.பி.சி. செய்தி இணையதளத்தின் படி, அவரது மரணத்திற்கான காரணத்தையோ அல்லது அவர் எங்கு இறந்தார் என்பதையோ அவரது பத்திரிக்கை சேவை உடனடியாக வெளியிடவில்லை. தரை மற்றும் நில இலக்குகளை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, கப்பலில் இருந்து ஏவப்படும் அதிவேக ஏவுகணையான ரஷியாவின் சிர்கானை (சிர்கான்) வடிவமைத்த பெருமை லியோனோவிற்கு உண்டு.

இந்த ஏவுகணை, கடற்படை தளங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவப்படுவதுடன், கடலோர பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படலாம். பொது தகவல்களை மேற்கோள் காட்டி, ஜிர்கான் ஏவுகணையானது மாக் 9 (ஒலியை விட 9 மடங்கு வேகம்) வரையிலான வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்றும், 400 முதல் 1,500 கி.மீ. வரையிலான வரம்பை கொண்டுள்ளது. மேலும் இது வழக்கமான மற்றும் அணு ஆயுத வார் ஹெட்கள் என இரண்டையும் சுமந்து செல்லக்கூடியது என்றும் ஆர்.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் நாயகனுக்கான தங்க நட்சத்திர விருது பெற்ற லியோனோவ், விண்வெளி அமைப்புகள் மற்றும் ஏவுகணை அமைப்புகளின் வடிவமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டார். ரஷிய - இந்திய பிரம்மோஸ் கூட்டு நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட கிரானைட், வல்கன் மற்றும் பாஸ்டியன் கடலோர பாதுகாப்பு அமைப்புகளை ஓனிக்ஸ் (பிரம்மோஸ்) ஏவுகணையுடன் உருவாக்கி, அவற்றை ஏற்றுக்கொள்ள செய்வதிலும், அத்துடன் மேம்பட்ட ஹைப்பர்சோனிக் வாகனங்கள் தொடர்பான பணிகளிலும் அவர் பங்கேற்றார் என்று ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

Leave a Reply