25,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றி வரும் கப்பல் ஒன்று நாளை (05) நாட்டிற்கு வந்து சேரும் என கமத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையால் எழும் உரச் சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்கும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
பெரும்போகத்தின் தொடக்கத்தில் விவசாய சமூகத்தினரிடையே உரம் குறித்த கவலைகள் எழுந்தபோதிலும், நாட்டில் தற்போதுள்ள தேவையை விட அதிகமான பொட்டாஷ் முரியேட் (MOP) மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் (TSP) உரங்கள் கையிருப்பில் உள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
யூரியா உரம் தொடர்பான ஒரு சிறிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதை ஒப்புக்கொண்டாலும், நெல் சாகுபடிக்குத் தேவைப்படும் 80,000 மெட்ரிக் தொன்களுடன் ஒப்பிடுகையில், நாட்டில் ஏற்கனவே கிட்டத்தட்ட 100,000 மெட்ரிக் தொன்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,.
உப பயிர்கள் மற்றும் மேலதிக பயிர்ச்செய்கைகளைக் கருத்தில் கொள்ளும்போது மேலதிகத் தேவைகள் ஏற்படக்கூடும் என்பதால், அதனைப் பூர்த்தி செய்வதற்காகவே நாளை (05) 25,000 தொன் உரம் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதுடன், மேலும் பல உரக் கப்பல்களைக் கொண்டுவருவதற்கு ஏற்கனவே கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


