அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கும், தற்போதைய அரச நிதி மற்றும் அனுமதிக்கப்பட்ட அரச செலவு எல்லைகளுக்குள் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்கும் அதேவேளையில், அத்தியாவசிய பொதுச் சேவைகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதை நோக்காக் கொண்டே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவினால் இந்தச் சுற்றறிக்கை அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், விசேட செலவின அலகுகள் மற்றும் ஆணைக்குழுக்களின் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் புதன்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, எரிபொருள் ஒதுக்கீடுகளைத் தரப்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அந்தச் சுற்றறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதன்படி, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிற பிரிவினருக்கு உரிமையுள்ள எரிபொருள் கொடுப்பனவுகள் மறு அறிவிப்பு வரும் வரை, மார்ச் 1 ஆம் திகதி நிலவரப்படியான எரிபொருள் விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
மேலும், எரிபொருள் கொடுப்பனவுக்குப் பதிலாக எரிபொருள் அளவு மற்றும் அதன் விலையை அடிப்படையாகக் கொண்டு செலுத்தப்படும் ஏனைய கொடுப்பனவுகளையும் கடந்த மார்ச் 01 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைக்கு அமையவே கணக்கிட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் குறித்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


