TamilsGuide

இந்தியா மறந்து போன இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்- தமிழ்ப்பெண்

1930ஆண்டில் அன்றைய மெட்ராஸ் (சென்னை) நகரில் 15 வயசு சிறுமிக்கும்,18 வயது சிறுவனுக்கும் திருமணம்.

மூணே வருஷம் கணவ்ர் இறந்து போனார். விதவை ஆன அவள் ஆறு மாச கர்ப்பம். பிறகு அந்த குழந்தைப் பெண்ணிற்கே குழந்தை பிறந்தது.

அந்த குடும்பத்தில் எந்த கேள்வியும் இல்லை. எந்த பதிலும் இல்லை. ஆழ்ந்த மவுனம் மட்டுமே. கையில் குழந்தையுடன் விட்டத்தை பார்த்து உட்காருவதே அவள் வாழ்க்கை ஆயிற்று.

போதும் இந்த தனிமை. வெறுமை என அவள் அப்போது எடுத்த முடிவை சந்திக்க அப்போதைய இந்தியா தயாராக வில்லை. அது அதிர்ந்து போனது.

அவள் அப்பா பாப்பு சுப்பாராவ், ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்டிரிக்கல் என்ஜினியரிங் பேராசிரியர். அவரை பார்த்து இந்த பெண் தலையில் சுரீர் என ஒரு பல்பு எரிந்தது. அது அவளது வாழ்க்கையை மட்டுமல்ல. லட்சக்கணக்கான இந்திய பெண்களின் எதிர்காலத்தையே மாற்றியது.

சென்னை கிண்டி என்ஜினியரிங் கல்லூரியில், எலக்ட்ரிக்கல் பட்டதாரி வகுப்பில் சேர்ந்தாள். ஆனால், அது அவ்வளவு எளிதாக‌ இருக்க வில்லை. முழுக்க முழுக்க ஆண்கள் நிறைந்த கல்லூரியில் இவள் ஒருத்தி மட்டுமே பெண். அது வரை முறை வாசல் வேலைக்காக கூட எந்த இரு பெண்ணையும் பார்த்திராத காலேஜ். தன்னந்தனியே வாழ்க்கையில் வெற்றிபெற‌ வேண்டும். தன் காலில் நின்று தன் குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்க வேண்டும் என்கிற ஒற்றை வேள்வித் தீ அவள் மனதில் பற்றி எரிய, 1943 ஆம் ஆண்டு அவள் என்ஜினியர் ஆனாள். இந்தியாவின் முதல் பெண் என்ஜினியர் இவள்தான்

மற்றவர்கள் எல்லாம் இந்த இளம் விதவை மீது மாறுபட்ட பார்வைகளை வீசினாலும், கல்லூரி பரிந்துரையால், இந்தியாவின் மிகப்பெரிய பக்ரா நங்கல் அணையின் டிரான்ஸ்மிஷன் லைன்களை வரையும் வேலை கிடைத்தது. கட்டுமானங்களை, நாடுகள் எழுப்பிக் கொண்டு இருந்த போது, இவள் அவற்றை ஒளிமயமாக்கி கொண்டு இருந்தாள்.

கொல்கத்தாவின் அசோசிடியேட்டட் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சிஸ்டம் டிசைனிங், பழுதுகளை சரி ஆக்குதல் என 30 ஆண்டுகள் அவள் அங்கு உழைத்தாள்.

அந்த காலத்தில் விதவைகள் எங்கும் பயணம் செய்யக்கூடாது என்பதால், சைட்டுக்கு விசிட் செய்யும் வாய்ப்பு மட்டும் இவளுக்கு மறுக்கப்பட்டது. அவள் இதை எதிர்த்து கலகம் செய்ய வில்லை. அதையும் ஒரு வாய்ப்பாக்கி, துல்லிய எலக்ட்ரிக்கல் டிசைன்களை வடிவமைத்து தருவதில் கவனம் செலுத்தி சாதனை படைத்தாள். கிரிட்டுகள்களுக்கு மின் சக்தி அளித்தாள்.

1964 அமெரிக்க நியூ யார்க் நகரில் முதல் சர்வதேச மகளிர் இன்ஜினியர்கள் மற்றும் சயின்டிஸ்ட்டுகளி ன் மாநாடு நடந்தது. அதில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பெண் இவள்தான். சேலை உடுத்தி கொண்டு கம்பீரமாக நடந்து அந்த மாநாட்டில் ஒரு கலக்கு கலக்கினார். ஆனால், இந்த தேசத்துக்கு இவள் பெயர் கூட தெரியாது.

1966 ஆம் ஆண்டு லண்டனின் இன்ஸ்டிட்யூட் ஆப் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங்-கில், முழு நேர உறுப்பினர் ஆனாள்.

நமது பாட நூல்கள், எஞ்சியரிங் கல்லூரிகள், நாட்டின் அணைகள், கிரிட்டுகள் எல்லாவற்றிலும் எத்தனை வோல்டேஜ் என குறிப்பிட பட்டு இருக்கும். ஆனால், ஒன்றில் கூட அவற்றை மின்மயமாக்கிய இவள் பெயர் இருக்காது.

அப்பேர்ப்பட்ட அவள் பெயர்தான் அய்யல சோமாயஜுல லலிதா. இந்தியா மதிக்கத் தவறிய, இந்தியா மறந்து போன இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் பொறியாளர்!!

Sulochana Ram

Leave a comment

Comment