ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று (31) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 11 ஆவது இருதரப்பு அரசியல் கலந்தாய்வு அமர்வில் பங்கேற்பதற்காகவே அவரது பயணம் மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் இன்று மாலை 4:00 மணியளவில் நாட்டை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கலந்தாய்வுக் கூட்டம் வரும் நாளை மறுதினம் வியாழக்கிழமை அமைச்சின் வளாகத்தில் நடைபெறும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இக்கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர், ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் மற்றும் இரு நாடுகளின் பிற சிறப்புப் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அமர்வின் போது, இரு நாடுகளின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறும்.
எதிர்கால சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் மீது இந்தப் பேச்சுவார்த்தைகள் குறிப்பாக கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரே ருடென்கோ, ரஷ்யாவின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிவிவகார பிரதி அமைச்சராகப் பணியாற்றுகிறார்.
அவர் வரும் சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட உள்ளார்.
இதற்கிடையில், ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் உட்பட, 26 ஆம் திகதி நாட்டிற்கு வந்த ஒரு தூதுக்குழு, பல சுற்று இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 28 ஆம் நாட்டிலிருந்து புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


