கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு
இலங்கை
சிறுபோக நெற்செய்கையை ஆரம்பிக்கும் நோக்கில், கந்தளாய் குளத்தின் பிரதான மதகுகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர் இன்று (30) காலை சுபவேளையில் திறந்துவிடப்பட்டது.
கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள சுமார் 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான முதல் கட்டமாகவே இந்நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியல் அலுவலக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் விவசாயத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரதான மதகை இயக்கி நீரை வெளியேற்றினர்.
இந்த நீர் வழங்கலின் மூலம் கந்தளாய் வான் எல, அக்போபுர, ஜெயந்திபுர, தம்பலகாமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நெல் வயல்களுக்கு தொடர்ச்சியாக நீர் வழங்கப்பட உள்ளது.
இந்த சிறுபோக நெற்செய்கையின் மூலம் சுமார் 12, 000 விவசாயக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நீர்ப்பாசன மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் நீர் முகாமைத்துவம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, அனைத்து விவசாய நிலங்களுக்கும் சமமான நீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.






















