TamilsGuide

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் விவசாய அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாட்டின் மற்றும் மக்களின் உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குமாறும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியிருந்தார்.

பாதுகாப்பான கையிருப்பைப் பேணுவதற்காக கொழும்பில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல் மற்றும் உர இறக்குமதிக்குக் கடன் வசதிகளை வழங்குதல் போன்ற, விடயங்கள் இதன்போது விவாதிக்கப்பட்டன.

2026ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் ஹெக்டேர் நெல் வயல்களில் செற்செய்கை பண்ணுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இதற்கு மொத்தமாக 1 லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் என அதிகரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் கடந்த முதலாம் திகதி 1 லட்சத்து 2ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா கையிருப்பில் இருந்ததாகவும், ஆனால் அதில் சுமார் 27ஆயிரம் மெட்ரிக் டன் கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 17ஆம் திகதி நிலவரங்களின் அடிப்படையில், நிறுவனங்களிடம் 68 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா மட்டுமே மீதமுள்ளதாகவும் இங்கு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவையான மீதமுள்ள உர இருப்புகளை இறக்குமதி செய்வது மற்றும் அடுத்த 03 மாதங்களுக்குத் தேவையான உர இருப்புகளை முறையான மேலாண்மையுடன் பராமரிப்பது குறித்த திட்டங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

இதேவேளை நெல் மற்றும் காய்கறிகள் போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

கடந்த காலத்தில் தங்களுக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்காததால் நிறுவனங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் தொடர்hபகவும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்திருந்தனர்.

இந்நிலையில் அதனை உடனடியாகச் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

Leave a comment

Comment