வளகுடாவில் போர்ச் சூழல் காரணமாக பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என பிரிடன் தேசிய விவசாயிகள் சங்கம் (NFU) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதலால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடந்த மூன்று வாரங்களாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இது விவசாய உற்பத்திச் செலவை நேரடியாகப் பாதித்துள்ளதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டோம் பிராட்ஷா (Tom Bradshaw) வழங்கிய தகவலின்படி, அடுத்த 6 வாரங்களில் தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் மிளகாய் (Peppers) போன்ற பசுமைக்குடில் (Glasshouse) விளைபொருட்களின் விலை உயரும்.
அடுத்த 3 முதல் 6 மாதங்களில் பால் மற்றும் ஏனைய பயிர் வகைகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பாக, விவசாய இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘சிவப்பு டீசல்’ (Red Diesel) விலை உயர்வு விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் இந்த எரிசக்தி நெருக்கடி குறித்து விவாதிக்க, பிரித்தானிய அரசாங்கத்தின் அவசரக்காலக் குழுவான ‘கோப்ரா’ (Cobra) அடுத்த வாரம் கூடி ஆலோசிக்கவுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வுடன், பெட்ரோல் விலை மற்றும் வீட்டு எரிசக்தி கட்டணங்கள் குறித்தும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இதேவேளை, பிரித்தானிய சில்லறை விற்பனை கூட்டமைப்பு (BRC), கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் பொருட்களின் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளது.
அதேவேளை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எரிபொருள் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரித்தானிய விவசாயத்துறை அமைச்சர் ஏஞ்சலா ஈகிள் (Angela Eagle), தெரிவித்துள்ளார்.


