கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை (23) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாளை காலை 6.00 மணி முதல் வழமை போன்று வாகனத் தரிப்பிட முகாமைத்துவ மற்றும் கட்டண அறவீட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, நிதி தொடர்பான நிலையியற் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நிலவிய வாகன வரிசைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக, கடந்த 18ஆம் திகதி முதல் வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீடு முறைமை மற்றும் வாகன இலக்கத் தகடுகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால், வாகன வரிசைகள் குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே மீண்டும் கட்டணங்களை அறவிட கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.


