TamilsGuide

கணவரும் குழந்தையும் நாடுகடத்தப்படுவதால் கனடாவில் கண்ணீர் விடும் பெண்

இந்தியர் ஒருவர் கனடாவிலிருந்து குழந்தையுடன் நாடுகடத்தப்படும் நிலையில், குழந்தையைப் பிரிந்து வாழ்வது எப்படி என கண்ணீர் விட்டுக் கதறுகிறார் அவரது மனைவி.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி சௌஹான். ரவியின் மனைவி இந்தியாவில் செவிலியராக பணியாற்றிவந்தார். 

அந்தப் பெண் தன் சொந்த ஊரில் தாக்கப்பட்டதாலும், மிரட்டுதலுக்குள்ளானதாலும் 2023ஆம் ஆண்டு கனடாவுக்குத் தபியோடி அங்கு அகதி நிலை கோரினார். 2024ஆம் ஆண்டு அவருக்கு அகதி நிலை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனைவியுடன் கனடா வந்த ரவி கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியலில் வாழ்ந்துவருகிறார். தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ரவியை அழைத்துள்ளார்கள் கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி அதிகாரிகள்.

வழக்கமான சோதனைதான் என எண்ணி மகனுடன் அங்கு சென்ற ரவியை நாடுகடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்துள்ளார் அவர்.

திங்கட்கிழமை ரவியும் அவரது மகனும் நாடுகடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்க, ரவியின் மனைவி, குழந்தையை பிரிந்து தன்னால் வாழ இயலாது என கண்ணீர் விட்டுக் கதறுகிறார்.

சிக்கல் என்னவென்றால், ரவியின் மனைவி இந்தியா திரும்பினால் அவரது உயிருக்கு ஆபத்து. அத்துடன், நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்காக காத்திருக்கும் அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல கனடா அனுமதிக்காது. 

ரவியும் அவரது மகனும் நாடுகடத்தப்பட்டு இந்தியா செல்வதால், அவர்கள் மீண்டும் கனடா திரும்ப அவர்களுக்கு விசா கிடைக்காது.

கியூபெக் மாகாணத்தைப் பொருத்தவரை, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற 10 ஆண்டுகள் வரை கூட காத்திருக்க நேரிடலாம்.

ஆக, ரவியின் மனைவி இந்தியா திரும்ப வழியில்லாமலும், ரவியும் தம்பதியரின் மகனும் இந்தியா சென்றால் மீண்டும் கனடா திரும்ப வழியில்லாமலும், ரவியின் மனைவிக்கு எப்போது நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கும் என தெரியாமலும், பெரிய கேள்விக்குறியுடன் திகைத்துப்போயிருக்கிறது ரவியின் குடும்பம்.

இதற்கிடையில், சமீப காலமாக, இப்படி அகதிகளின் குடும்பங்களை கனேடிய எல்லை அதிகாரிகள் பிரித்துவருவதாக பலரும் கவலை தெரிவித்துவருகிறார்கள். 

Leave a comment

Comment