கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களின் உணர்வுக்காக சட்டத்தரணிகள் துணை நிற்போம் என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
நேற்று யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரை விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது சட்ட ஆலோசனை வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பல்கலைக்கழக மாணவர்களை சுமார் நான்கு மணித்தியாலங்கள் குற்றத்த தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் தேவை ஏற்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என தெரிவித்தனர்.
மாணவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை பல்கலைக்கழக மாணவர்களாக வெளிப்படுத்தியுள்ளார்கள்
ஆகவே தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு தேவையான சட்ட உதவிகளை சட்டத்தரணிகளாக துணை நிற்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
சட்டத்தரணிகளான திருக்குமரன், சதீஷ் மற்றும் கோல்டன் ஆகியோரும் மாணவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


