இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert), பாத்ஃபைண்டர் அறக்கட்டளை (Pathfinder Foundation) ஏற்பாடு செய்திருந்த தூதுவர்களுடனான வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இலங்கையுடனான உறவை வலுப்படுத்தவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் பிரான்ஸ் தயாராக இருப்பதாகத் தூதுவர் ரெமி லம்பேர்ட் தெரிவித்தார்.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள், எரிசக்தி பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார பாதிப்புகளை உருவாக்குவதாகக் குறிப்பிட்ட அவர், பதற்றத்தைத் தணிக்கவும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பிரான்ஸ் தூதரக ரீதியாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் ‘இரு நாட்டுத் தீர்வு’ (Two-state solution) என்பதற்குப் பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
இலங்கை இந்தியப் பெருங்கடலில் ஒரு முக்கிய மூலோபாய பங்காளியாக இருப்பதாகக் குறிப்பிட்ட தூதுவர், கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் சமுத்திர பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் நிலையான மேம்பாடு ஆகிய துறைகளில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, காலநிலை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன கால சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு ஒத்துழைப்பு அவசியம் என அவர் அழைப்பு விடுத்தார்.
கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த தூதுவர், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பங்களிப்பை ஒரு முக்கிய பொருளாதார காரணியாக அங்கீகரித்தார்.
அதேவேளை, உறவுகளில் சமநிலையைப் பேணுவதும் அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தைகளும் முக்கியம் என்றார்.
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டமை மற்றும் இலங்கை எல்லைக்கு அருகில் ஈரானியக் கப்பல் ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் குறித்துக் கவலை வெளியிட்ட அவர், சர்வதேச சட்டங்களுக்கு இணங்க இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
இலங்கையின் ஜி.எஸ்.பி+ (GSP+) வரிச்சலுகை தொடர்வதற்கு நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவது அவசியம் என்பதைத் தூதுவர் நினைவுபடுத்தினார்.
அத்துடன், எரிசக்தி பாதுகாப்பைப் பலப்படுத்த சிவில் அணுசக்தி உட்படப் பல்வேறு எரிசக்தி மூலங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்கினார்.
மோதல்களால் ஏற்படும் சிவிலியன் உயிரிழப்புகள் குறித்துப் பிரான்ஸ் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அமைதியை மீட்டெடுக்கத் தூதரக ரீதியிலான தீர்வுகளை நோக்கி உலகம் நகர வேண்டும் என்றும் கூறி இக்கலந்துரையாடலை அவர் நிறைவு செய்தார்.


