மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் சக்திவாய்ந்த பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள தகவல்களில், தலா 5,000 இறாத்தல் (2,268 கிலோ) எடையுள்ள, நிலத்தடி பதுங்கு குழிகளைத் ஊடுருவித் தாக்கக்கூடிய "பங்கர் பஸ்டர்" ரக குண்டுகள் பல இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஈரானின் கடற்கரையோரம் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த ஏவுகணைத் தளங்களே இலக்கு வைக்கப்பட்டன.
சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானிய எதிர்ப்பு ஏவுகணைகளை அழிப்பதே இதன் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 வீதம் கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதோடு கடல்சார் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பங்கர் பஸ்டர் குண்டுகள் சாதாரண குண்டுகளைப் போல தரைப்பரப்பில் வெடிக்காமல், தடிமனான எஃகு கவசத்தின் உதவியுடன் நிலத்தடியில் ஆழமாக ஊடுருவிச் சென்று பின்னரே வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரு குண்டின் மதிப்பு சுமார் 288,000 டொலர்கள் (சுமார் 9 கோடி இலங்கை ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா பயன்படுத்திய 30,000 இறாத்தல் குண்டுகளை விட இவை சக்தி குறைந்தவை என்றாலும், பதுங்கு குழிகளை அழிப்பதில் இவை மிகவும் துல்லியமானவை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


