பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சாரா அலிகான். ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட சாரா அலிகான் கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு அடிக்கடி சென்று வருவார். ஆனால் தற்போது அவரால் கோவில்களுக்கு செல்ல முடியவில்லை.
பத்ரிநாத்-கேதார்நாத் கோவில் குழு பக்தர்களுக்கு புதிய ஒரு விதியை அமல்படுத்தி உள்ளது. இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிலுக்கு செல்ல விரும்புவோர் கோவில் நிர்வாகத்திடம் இந்துமதத்தை நம்புவதாக பிரமாண பத்திரம் சமர்பித்த பின்னரே கோவிலுக்குள் நுழைய முடியும். கோவிலின் புனிதத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக கோவில் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அளித்த குழுவின் தலைவர் ஹேமந்த் திவேதி, சாரா அலிகானை உதாரணமாகக் காட்டி, “சாரா அலிகான் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்குச் செல்ல முடியாது. அவர் செல்ல விரும்பினால், சனாதன தர்மத்தின் மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்த பின்னரே அவர் கோவிலுக்குள் நுழைய முடியும்,” என்று கூறினார்.
பாலிவுட் நடிகை சாரா அலி கான், பிரபல நடிகர் சயீப் அலி கானின் மகள் ஆவார். ஆனால், அவரது தாயார் அம்ரிதா சிங் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர். சாரா அலிகான் கூறியுள்ளபடி, அவர் சிறுவயதில் இருந்தே இரு மதங்களையும் பின்பற்றி வருகிறார். அவர் தனது தாயாருடன் பல கோவில்களுக்குச் செல்கிறார். அவர் ‘கேதார்நாத்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அப்போது இங்கு படப்பிடிப்பில் இருந்த சாரா அலிகான், அப்போதிருந்து கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தின் பக்தையாக இருந்து வருகிறார். அவர் வருடத்திற்கு ஒரு முறையாவது இந்தக் கோவில்களுக்குத் தொடர்ந்து சென்று வருகிறார். ஆனால், இனிமேல் அவர் கோவிலுக்குச் செல்வாரா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


