TamilsGuide

18 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 5 சீனப் பிரஜைகள் கைது

சுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மொபைல்கள் நாட்டிற்குள் கடத்த முயன்ற ஐந்து சீன நாட்டினர் இன்று (17) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வந்திருந்த சந்தேக நபர்கள், இன்று அதிகாலை 12.10 மணிக்கு சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் (MU-6017) மூலம் ஷாங்காயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியபோது சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனையின்போது, ​​அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, மொத்தம் 99,400 சிகரெட்டுகளைக் கொண்ட 497 அட்டைப் பெட்டி சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளையும், 422 பயன்படுத்தப்பட்ட சீனத் தயாரிப்பு கைபேசிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன
 

Leave a comment

Comment