TamilsGuide

அமெரிக்காவுக்குள்ளேயே பழிவாங்கும் படலம் - பாதுகாப்பு பிரிவினர் அதிர்ச்சி

அமெரிக்காவிற்குள் 'தனிநபர் தாக்குதல்கள்' அதிகரித்துள்ளமை அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மட்டும் மெச்சிகன் மற்றும் வெர்ஜீனியா ஆகிய மாநிலங்களில் 500 மைல் இடைவெளியில் இரண்டு பயங்கரவாதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மிச்சிகனில், லெபனானில் பிறந்த அய்மான் கசாலி (41) என்பவர், வெடிபொருட்கள் மற்றும் பெற்றோல் நிரப்பப்பட்ட தனது வாகனத்தை யூத வழிபாட்டுத் தலம் (Synagogue) ஒன்றிற்குள் மோதித் தீவைத்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலியத் தாக்குதலில் தனது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே அவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது. சம்பவத்தை அடுத்து இறுதியில் அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில், வெர்ஜீனியாவின் ஓல்ட் டொமினியன் பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஐஎஸ் (ISIS) ஆதரவாளர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே நேரடித் தொடர்புகள் இல்லை என எஃப்பிஐ (FBI) தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் உளவுப்பிரிவில் மேற்கொண்டுள்ள 50 சதவீத ஆட்குறைப்பு நடவடிக்கைகள், இத்தகைய 'சுய-தீவிரவாத' (Self-radicalized) தாக்குதல்களைக் கண்டறிவதில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க குடிவரவு விவகாரங்களில் அரசு அதிக கவனம் செலுத்துவதால், மத்திய கிழக்கு போர் காரணமாக உள்நாட்டில் ஏற்படக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் புறக்கணிக்கப்படுவதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 

Leave a comment

Comment