சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதியில்லை என தெரிவித்து, அவர்களை வெளியேற்றுவதற்கு பவானந்தராஜா எம்.பி முயற்சித்தார்.
இந்நிலையில் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தாம் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உரிமை இருக்கின்றது என தெரிவித்த உறுப்பினர்கள், அந்த சுற்றுநிருபத்தை வாசித்து காட்டினர். அதன்பின்னர் அவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தின் பின்னர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கூட்டத்திலும், பிரதேச சபை உறுப்பினர்களாகிய எம்மை புறக்கணிக்கின்ற நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனுமதியின்றி குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற அனைவரையும் வெளியேற்றுமாறு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் கூறினார்.
பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு எமக்கு அனுமதி வழங்குமாறு கோரி நாங்கள் இதற்கு முன்னர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரான ஸ்ரீ பவானந்தராஜாவிடம் பிரதேச சபையின் ஊடாக கடிதம் ஒன்றினை வழங்கினோம்.
இந்நிலையில் அவர் சுற்றுநிருபத்தில் உள்ள ஒரு சரத்தினை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் நாங்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென பிரதேச சபைக்கு பதில் வழங்கினார்.
ஆனால் அதே சுற்றுநிருபத்தில் 5.4இல் அபிவிருத்தி செயற்பாட்டுடன் தொடர்புடைய எந்த ஒரு தரப்பினரையும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு அழைப்பதற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவிற்கு அதிகாரமுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்கையில் திட்டமிட்ட முறையிலே எங்களை வெளியேற்றுமாறு கூறியுள்ளார். எனவே நாங்கள் அதற்கு இடமளிக்க மாட்டோம். தொடர்ச்சியாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கலந்துகொள்வோம் என்றனர்.


