TamilsGuide

இந்திய பெருங்கடல் நாடுகளின் வலுவான பிராந்திய ஒத்துழைப்புக்கு ரணில் அழைப்பு

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே வலுவான அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், பிராந்திய ஒருங்கிணைப்பு இல்லாதது புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் இப்பகுதியை பாதிக்கப்படக்கூடியதாக மாற்றியுள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய நிலைமை குறித்து ஒரு காணொளி அறிக்கையை வெளியிட்ட ரணில் விக்ரமசிங்க, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் மோதலை சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும், பிராந்திய நீரில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்த சம்பவத்தையும் ரணில் விக்சமிங்க மேற்கோள் காட்டினார்.

இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பதில் “நாம் ஒரு உதவியற்ற சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை” நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், இந்தியப் பெருங்கடலின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றிப் பிரதிபலித்த அவர், “பல்வேறு சமூகங்களுக்கிடையேயான தொடர்புகளிலும் நாகரிகங்களிலும் இந்தியப் பெருங்கடல் மிகப் பழமையானது” என்று விவரித்தார்.

வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் உறவுகளில் அதன் நீண்டகால பங்கையும் அவர் எடுத்துக்காட்டினார்.

இருப்பினும், அட்லாண்டிக் மற்றும் பசுபிக் போன்ற ஏனைய பிராந்தியங்களில் காணப்படும் வலுவான ஒத்துழைப்புடன் இதை அவர் வேறுபடுத்தினார்.

அங்கு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) மற்றும் ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு, அத்துடன் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் அரசியல் உரையாடல் முன்னேறியுள்ளது.

எனினும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இத்தகைய ஒத்துழைப்பு நிலைகள் பெரும்பாலும் இல்லை. 

இந்த வகையான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் தனிப்பட்ட கலந்துரையாடல்கள் இல்லாமல், நமக்குத் தேவையான ஒருங்கிணைப்பை நாம் மேற்கொள்ள முடியாது.

எனவே, பிராந்தியத்தில் உள்ள அரசாங்கத் தலைவர்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது சந்தித்து அரசியல் விவகாரங்கள், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மீன்பிடித்தல், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி முன்மொழிந்தார்.

இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு மற்றும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு பற்றி குறிப்பிட்டு பேசிய அவர், கடல்சார் பாதுகாப்பு குறித்து மேலும் வலியுறுத்தினார். 

இந்த முயற்சிகள் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ள நிலையில், அரசியல் அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், மீன்பிடித்தல், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் முன்னாள் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகையில் ரணில் விக்ரமசிங்க, இந்தியா மற்றும் சீனாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை எடுத்துரைத்தார்.

இரு சக்திகளுக்கும் இடையிலான உறவுகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 

2050 மற்றும் அதற்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் இந்தியாவும் சீனாவும் இருக்கும். 

எனவே, இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு இந்தியா மற்றும் சீனா உறவுகள் மிகவும் முக்கியமானவை என்றார்.

இறுதியாக பிராந்திய நாடுகளிடையே தொடர்ச்சியான கலந்துரையாடலின் அவசியத்தை வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, ஏனைய கடல்சார் பிராந்தியங்களுடன் ஒப்பிடக்கூடிய ஒருங்கிணைப்பின் அளவை அடைவதற்கு நிலையான உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

Leave a comment

Comment