TamilsGuide

உலக எண்ணெய் பாதையில் பதற்றம் - ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலைரேசா தங்சிரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று, எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக அந்த நீரிணை வழியாகச் சென்றதாகக் கூறி, பின்னர் தனது எக்ஸ் தளப் பதிவை நீக்கியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புடன் எண்ணெய் கப்பல் ஒன்று ஹார்முஸ் நீரிணையை கடந்ததாகக் கூறப்படும் தகவலை ஈரான் முற்றாக மறுத்துள்ளது.

அந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளின் கடற்படை இந்த பாதையைப் பயன்படுத்த முயன்றால், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் ஆளில்லா வானூர்திகள் மூலம் அவை தடுத்து நிறுத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான ஒரு பாதையாக ஹோர்முஸ் நீரிணை கருதப்படுகிறது. தற்போதைய போர்ச் சூழலில் இந்தப்பகுதியில் ஈரானின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
 

Leave a comment

Comment