TamilsGuide

மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (08) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

உலகில் ஏற்படும் எந்தவொரு யுத்தத்தின் போதும் மனிதநேயத்தின் கொடியை முன்னெடுத்துச் செல்லும் தேசம் இலங்கைத் தேசம் என்ற செய்தியை உலகிற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.

உலகில் எவ்வளவு வளர்ந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு செல்வதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து மக்களையும் பேதமின்றி, பரிவுணர்வுடன் நடத்தும் ஒரு அரசாக மாற்றுவதில் இந்நாட்டு சிறுவர்களும் பெண்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் மகளிர் தின நிகழ்வில் ஜனாதிபதி கூறினார்.

“நாம் அரசாங்கத்தை அமைக்கும் போது இங்குள்ள சகோதரிகள் ஒரு விசேட பணியை நிறைவேற்றினார்கள் என்று நான் நினைக்கிறேன். அத்துடன், சமீபத்திய வரலாற்றில் அதிகளவான பெண்கள் ஓரிடத்தில் திரண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்… ஒரு அரசாங்கமும் ஆட்சியும் சிறந்ததா என்பதை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல், அந்த நாட்டின் பெண்கள் எந்தளவுக்கு அரசாங்கத்துடன் இருக்கிறார்கள் என்ற காரணியே என நான் கருதுகிறேன். எமது ஆட்சி மற்றும் எமது அரசாங்கத்தின் நிர்வாகம் தொடர்பில் இந்நாட்டில் உள்ள பொதுவான நம்பிக்கையின் அடையாளமாக நீங்கள் ஆயிரக்கணக்கில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அதனை இன்று நிரூபித்துள்ளீர்கள்.

எமது நோக்கம் என்ன? பெருந்துயரத்தையும் வேதனையையும் ஒரு பாரிய சுமையாகத் தமது தலையிலும் இதயத்திலும் சுமந்து கொண்டு விம்மி அழும் பெண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் செயற்பட்டு வருகிறோம்… ஒரு நாடாகவும், ஒரு தேசமாகவும் நாம் ஒட்டுமொத்தமாக எவ்வாறு மேலெழுவது என்ற வேலைத்திட்டத்திற்குள், பெண்களுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகள், மற்றும் அவள் பெண்ணாக இருப்பதனால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்துள்ளோம்.”

இன்று போதைப்பொருள் இளைஞர்களை விழுங்கி வருவதாகவும், இது தாய்மார்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, தமது பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாவது ஒரு தாய்க்கு வேதனையைத் தருவதாகவும், உறவினர்கள் மத்தியிலும் கிராமத்திலும் பிள்ளை ஒதுக்கப்படுவதனால் தாய்மார்கள் நிர்க்கதியாகியுள்ளனர் எனவும், அதனால் அரசாங்கம் நச்சுப் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும், போதைப்பொருள் அனர்த்தத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் கூறினார்.

தமது பிள்ளைக்குச் சிறந்த கல்வியை வழங்குவதே தாய்மார்களின் பிரதான எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தாய்மார்களின் மனங்களில் உள்ள பிள்ளையின் கல்விச் சுமையிலிருந்து அவர்களை விடுவிப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வருடம் தரம் 6 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, பரிவுணர்வுள்ள ஒரு பிள்ளையை உருவாக்கக்கூடிய கல்வி முறையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பெண்களினால் கடனைப் பெறுவதற்குச் சொத்துக்கள் இல்லாவிட்டால், அதற்கான உத்தரவாதத்தை அரசாங்கமே வழங்கக்கூடிய வகையிலான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் எனவும், கடனைச் செலுத்தப் பெண்களுக்கு முடியாமல் போனால் அதனை அரசாங்கம் செலுத்தும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

நுண்நிதி கடன்களின் வட்டி காரணமாகக் கிராமங்களில் அதிகளவான பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கிராமப்புறப் பெண்கள் இந்தக் கடன் வலையில் சிக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதிலிருந்து பெண்களை மீட்பதற்காகச் சட்டங்கள் உருவாக்கப்படும் எனவும், மறுபுறம் திட்டத்தை வெற்றிகரமாகக் கண்காணித்துச் செயற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் சலுகை வட்டியில் கடன் வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

“விசேடமாக மகளிர் அமைச்சின் ஊடாக ஒரு உதவித் திட்டம் உள்ளது. அவளால் கடனை எவ்வகையிலும் தாங்கிக்கொள்ள முடியாவிட்டால், அவளுக்குப் பொருளாதார ரீதியில் இயலுமை இல்லை என்று கூறி அவளைப் பொருளாதாரத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமா? அப்படி முடியாது. பொருளாதார இயலுமை இல்லாத ஒருவரை நாம் எவ்வாறு பொருளாதாரத்தில் பங்குதாரராக்குவது என்பதற்காக ஒரு நிதி உதவித் திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தினோம். இந்த வருடமும் அடுத்த வருடமும் அதனை மேலும் பலப்படுத்தி விரிவுபடுத்த எதிர்பார்க்கிறோம்.”

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பிற்கான தற்போதைய சட்டங்கள் போதாது என்றால் புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

“நீண்ட காலமாக வேதனையையும் துயரத்தையும் இதயத்தில் தாங்கி, அதனைத் தலையில் சுமையாகக் கொண்ட எமது நாட்டுப் பெண்களை அந்தச் சுமையிலிருந்து விடுவித்து, புதியதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடனேயே நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் செயற்படுகின்றோம் என நாம் நம்புகிறோம்.”

சில குறிப்பிட்ட கலாசாரங்கள் காரணமாகப் பெண்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான பெண்களை விடுவிப்பதற்குத் தேவையான புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அது கலாசார மோதல்களை ஏற்படுத்தாத வகையில் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment