ராணுவ உளவு வேலைகளுக்கு ஏஐ உடைய முழு அணுகலையும் வழங்க முடியாது என கூறி ஆந்ரோபிக் நிறுவனம் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனுடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அதன்பின் அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ நிறுவனம் கைப்பற்றியது.
இந்நிலையில் பென்டகனுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவு தலைவரான கைட்லின் கலினோவ்ஸ்கி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவர் கடந்த 2024 நவம்பரில்தான் மெட்டா நிறுவனத்திலிருந்து விலகி ஓபன் ஏஐ இல் இணைந்தார்.
பென்டகனின் ரகசிய நெட்வொர்க்குகளில் ஓபன் ஏஐ-இன் ஏஐ மாடல்களைப் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என கைட்லின் தெரிவித்துள்ளார்.
சட்ட மேற்பார்வையின்றி அமெரிக்க குடிமக்களை ஏஐ மூலம் உளவு பார்ப்பது மற்றும் மனிதக் கட்டுப்பாடு இல்லாத தானியங்கி ஆயுதங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து இன்னும் ஆழமான விவாதங்கள் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஓபன் ஏஐ தரப்பு கூறுகையில், "தேசிய பாதுகாப்பிற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதற்காகவே பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு உளவு வேலைகளுக்கோ அல்லது தானியங்கி ஆயுதங்கள் தயாரிப்பதற்கோ எங்களது தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாது.
இது தொடர்பாக அரசு மற்றும் பொது அமைப்புகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஆந்த்ரோபிக் நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதால் டிரம்ப் ஆத்திரமடைந்தார்.
எனவே ஆந்த்ரோபிக் நிறுவனத்தை பென்டகன் தனது 'சப்ளை செயின் ரிஸ்க்' பட்டியலில் சேர்த்து அதன் செயல்பாடுகளை பகுதியளவு முடக்கியுள்ளது.
இந்தப் பட்டியலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடி, கடந்த காலங்களில் அதிபர் டிரம்ப் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
முன்னதாக மனிதத் தலையீடு இல்லாத ஆயுதங்கள் மற்றும் மக்கள் மீதான கண்காணிப்பு போன்றவற்றுக்குத் தங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சரியல்ல என்று ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடியும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


