அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் உயிர்காக்கும் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளில் 22 பேர் நேற்று (07) கொக்கலையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஐரிஸ் தேனா என்ற கப்பல் தாக்கப்பட்டதை அடுத்து புதன்கிழமை முதல் அவர்கள் தெற்கு துறைமுக நகரமான காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் இன்னும் 10 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், இந்தியப் பெருங்கடலில் இருந்து மீட்கப்பட்ட 84 ஈரானியர்களின் உடல்களும் வைத்தியசாலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐரிஸ் தேனாவில் இருந்து உயிர் தப்பியவர்களை சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி கையாளப்படுவதாகவும், அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை உதவிக்காகத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கப்பல் மூழ்கிய ஒரு நாளுக்குப் பின்னர் தரையிறங்க அனுமதிக்கப்பட்ட தெஹ்ரானின் இரண்டாவது கப்பலான ஐரிஸ் புஷேரில் இருந்து மேலும் 219 ஈரானியர்களுக்கு இலங்கை பாதுகாப்பான புகலிடத்தையும் வழங்குகிறது.
குறித்த கப்பலிலிருந்து வந்த நபர்கள் தலைநகர் கொழும்புக்கு வடக்கே உள்ள வெலிசாரவில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் கப்பல் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, ஐரிஸ் புஷேர் கப்பலை வடகிழக்கு துறைமுகமான திருகோணமலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளது, எனினும், இயந்திரக் கோளாறு, பிற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து தாமதமாகியதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேநேரம், இந்த விடயத்தில் ஈரானியர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கக் கூடாது என்று வொஷிங்டனின் அழுத்தம் இருந்ததாகக் கூறப்படும் கூற்றுக்களை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
மேலும், கொழும்பு சர்வதேச சட்டம் மற்றும் அதன் சொந்த உள்நாட்டுச் சட்டத்தால் மட்டுமே வழிநடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
கடலில் மீட்கப்பட்ட ஈரானியர்களின் நிலைப்பாடு இலங்கையைப் பொறுத்தது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையை கையாள்வதில் இலங்கையின் இறையாண்மையை அமெரிக்கா நிச்சயமாக மதிக்கிறது மற்றும் அங்கீகரிக்கிறது என்று கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், இந்தியா சனிக்கிழமை மூன்றாவது ஈரானிய போர்க்கப்பலான IRIS Lavanஐ அதன் துறைமுகங்களில் ஒன்றில் மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த அனுமதித்ததாகக் கூறியது.
லவன் கப்பல் புதன்கிழமை தென்மேற்கு இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த வாரம் போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படை மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த மூன்று கப்பல்களும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


