TamilsGuide

நிபந்தனையற்ற சரணாகதிதான் ஈரானுக்கு ஒரே வழி - டொனால்ட் ட்ரம்ப்

நிபந்தனையற்ற சரணடைதலை தவிர, ஈரானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், நாட்டிற்கு யார் நல்லத் தலைவராக இருக்கமுடியும் என்பதற்கு தன்னிடம் சில யோசனைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 'சரணடைந்த பிறகு, ஒரு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரை தேர்ந்தெடுத்து அமெரிக்காவும், அதன் அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டணிகளும் மற்றும் பங்காளிகளும், ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம்' எனவும் சமூக வலைதளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் பொருளாதாரத்தை உயர்த்த அவர்கள் பாடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது கூட்டுத் தாக்குதலை தொடர்ந்து இன்றுடன் ஒருவாரம் ஆகிறது. தொடர்ந்து தாக்குதலையும் இருநாடுகளும் தொடர்கின்றன. ஈரானும் பதிலடி கொடுத்துவருகிறது.

மேலும்அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்ததாகக் கூறி, ஈரான் தனது அண்டை நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர்பதற்றம் நிலவிவருகிறது.

இந்தப் போர்ச்சூழல் மத்திய கிழக்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிற்கும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார பாதிப்பை தாண்டி, ஈரானில் உள்ள பொதுமக்கள், குழந்தைகள் இயல்புவாழ்க்கையை இழந்து தவித்துவருகின்றனர். இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் இந்த கூற்று வந்துள்ளது. 
 

Leave a comment

Comment