தமிழ் திைரயுலகில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் தற்போது நடிகர் சூர்யா, தனுஷ், அல்லு அர்ஜூன் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய இன்டீ பாடல் "பவழ மல்லி" சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த பாடல் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர், "நான் எனது முதல் திரைப்படத்தில் இணையும் முன்பே, இயக்குநர் அட்லி அண்ணா என்னிடம் தனது அடுத்த படத்தில் பணியாற்றுகிறாயா என கேட்டார். இது தொடர்பான சந்திப்பின் போது நான் இசையமைத்த பாடலை அட்லி அண்ணா கேட்டார். பாட்டை கேட்டு முடித்ததும், என் அடுத்தப் படத்திற்கு இசையமைக்கிறாயா என கேட்டார்.
பாட்டை கேட்டதும், சற்றும் யோசிக்காமல் அவர் கேட்டது என்னை மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்று அவர் என் மீது வைத்த நம்பிக்கை, என் மீது எனக்கிருந்த நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியது. அட்லி அண்ணாவுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்," என்றார்.


